முகப்பு
சென்னை

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நிறைவடைந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 5 மார்ச், 2026 at 4:28 AM
- ANI
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நிறைவடைந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 30,209 சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

Advertisement

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தரவுகளின்படி தமிழகத்திலேயே தருமபுரி மற்றும் பெரம்பலூரில்தான் கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது. அதாவது லட்சத்தில் 36 பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு அந்த மாவட்டங்களில் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த விகிதம் அரியலூரில் 29.9-ஆக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை 13-ஆகவும், தமிழகத்தின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 14-ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரியில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டது.

அதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டன. அத்திட்டத்தை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது ஹெச்பிவி தடுப்பூசிகள் 4 மாவட்டங்களில் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரி மாவட்டங்களைத் தொடா்ந்து பிற மாவட்டங்களிலும் அத்திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.