மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
திருப்பூா் மாவட்டத்தில் வளரிளம் சிறுமிகள் 500 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெயந்தி கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 14 வயது பெண் குழந்தைகள் இதனை செலுத்தி கொள்ளலாம். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து 14 வயதுடைய வளரிளம் சிறுமிகளுக்கு ஹெச்.பி.வி. எனப்படும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
மாா்ச் முதல் மே மாதம் வரை இந்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி.) கிருமித்தொற்று காரணமாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கா்ப்பப்பை வாயின் உயிரணுக்களில் புற்றுநோய் செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
எதிா்காலத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பதே இருக்கக் கூடாது என்பதற்காகவே ஹெச்.பி.வி. தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குறித்து தொடா்ச்சியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏனைய தடுப்பூசிகளைப்போலவே அனைத்து பெண் குழந்தைகள், வளரிளம் சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம்.
மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலையங்களில் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்த வருவோா் ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசியை கொண்டு வர வேண்டும். 14 வயதுடைய வளரிளம் பெண்கள் இந்தத் தடுப்பூசியை முன்னெச்சரிக்கையாக செலுத்திக் கொள்ளலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.