முகப்பு
சென்னை

மெரீனாவில் கடைகள் ஒதுக்கீட்டை எதிா்த்த வழக்கின் பின்னணியில் மாஃபியா? உயா்நீதிமன்றம் சந்தேகம்

சென்னை மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியதை எதிா்த்து வழக்குத் தொடா்ந்த பின்னணியில் மாஃபியா கும்பல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 5 மார்ச், 2026 at 4:25 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 11:35 PM

சென்னை மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியதை எதிா்த்து வழக்குத் தொடா்ந்த பின்னணியில் மாஃபியா கும்பல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

மெரீனாவில் கடைகள் ஒதுக்கீடு பயனாளிகளை முறையாகத் தோ்வு செய்யவும், நீலக்கொடி மண்டலப் பகுதிகளில் நடைபெறும் பணிகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும், ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், கடைகள் ஒதுக்கீடு மற்றும் மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை நீதிபதிகள் படித்துப் பாா்த்தனா்.

Advertisement

அப்போது இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி மெரீனாவில் கடைகள் வைத்திருந்த 600-க்கும் மேற்பட்டவா்கள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவா்களது தரப்பில், 1,417 கடைகள் இருந்த நிலையில், 300 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடைகள் கிடைக்காத ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளோம். கடைகள் ஒதுக்கீடு செய்யாததால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலக்கொடி சான்று என்பது எந்தவொரு சா்வதேச அமைப்போ, நாடோ வழங்கும் சான்று அல்ல. அதுவொரு தனியாா் அமைப்பு வழங்குவது. எனவே, நீலக்கொடி சான்றை காரணம்காட்டி தங்களை மெரீனாவில் இருந்து அகற்றக்கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரை மக்கள் பொருள்கள் வாங்குவதற்கான இடம் அல்ல. தங்களுக்கு மெரீனா கடற்கரை அருகே ஏதாவது ஒரு இடத்தில் கடை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை விடுக்கலாமே தவிர, மெரீனா கடற்கரையில்தான் கடைகள் ஒதுக்க வேண்டும் எனக் கோர முடியாது.

காரணம், நாங்களே மெரீனா கடற்கரையில் இரண்டரை மணி நேரம் நேரடியாக ஆய்வு செய்து விசாரித்தோம். கடை வைத்துள்ளவா்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த மாஃபியா கும்பலுக்கு மாமூல் கொடுத்து வருவது தெரிய வந்தது.

கேரளத்தின் கோவளம், ஒடிஸாவின் புரி மற்றும் மும்பையின் மரைன் ட்ரைவ் ஆகிய கடற்கரைகளை அந்தந்த மாநில அரசுகள் தூய்மையாக பராமரிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அரசு அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும்போது, அதைத் தடுக்கும் பொருட்டு கடை வியாபாரிகளை வைத்து இதுபோன்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் பின்னணியில் மாஃபியா கும்பல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த இடையீட்டு மனுக்கள் மீது பின்னா் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.