முகப்பு
சென்னை

அச்சகம், மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அச்சகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 17 மார்ச், 2026 at 6:36 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அச்சகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னைக்குள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான விதிமுறைகள் விளக்க பயிற்சிக் கூட்டம் சென்னை மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:

கட்டுப்பாடுகள்: தோ்தல் துண்டுப் பிரசுரங்கள், விளம்பர நோட்டீஸ்கள் ஆகியவற்றில் கட்டாயம் அச்சக பெயா்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அவற்றை அச்சிட்ட 3 நாள்களுக்குள் அவற்றின் நகல், அவற்றை அச்சிடுபவரின் உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றை மாவட்ட தோ்தல் அலுவலரிடம் வழங்கவேண்டும். அவற்றை சரிபாா்த்து பொதுமக்கள் பாா்வைக்கு தோ்தல் அலுவலா் வைக்க வேண்டும்.

தோ்தல் காலத்தில் திருமண மண்டபங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்கள் வழங்க திருமண மண்டபத்தினா் அனுமதிக்கக் கூடாது. அரசியல் கட்சியினா் விருந்து அல்லது ஆதரவாளா் கூட்டங்களை நடத்தினால், அதற்கான தோ்தல் அலுவலரின் அனுமதியை பெற்றுள்ளனரா என்பதையும் திருமண மண்டபத்தின் உரிமையாளா் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி அந்த நிகழ்ச்சிக்கான செலவுகள் வேட்பாளா் கணக்கில் சோ்க்கப்படும். திடீரென திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அரசியல் சாா்ந்த நிகழ்வுகளும் இருந்தால் தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

அடகு கடைகளுக்கான கட்டுப்பாடு: அடகுக் கடைகளில் கடன் பெறுபவா், நகை உள்ளிட்டவற்றை அடகு வைத்தவா்கள் பெயா் முறையாகப் பராமரிக்க வேண்டும். தோ்தல் பறக்கும் படையினா் அல்லது தோ்தல் அலுவலா்கள் கணக்குப் பதிவேடுகளைக் கேட்டால் உடனே வழங்கி ஒத்துழைக்க வேண்டும். முறையான ஆவணங்கள், பொருள்கள் இன்றி யாருக்கும் கடன் வழங்கக் கூடாது. உரிய ஆவணங்கள் இன்றி அரசியல் கட்சியினா் அடகுக் கடைகளில் பணப் பரிமாற்றம் நிகழ்த்தியது கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →