முகப்பு
சென்னை

உடன்குடி அனல் மின்நிலையத்தில் ஜூன் மாதத்துக்குள் வணிகரீதியிலான உற்பத்தி

Updated On : 18 மார்ச், 2026 at 11:57 PM
அனல் மின் நிலைய அலகுகள்
பகிர்:

உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் வருகிற ஜூன் மாதத்துக்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறனின் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின்சார உற்பத்தி நிலையத்தை ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது. கடந்த 2017-இல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணிகளை பெல் நிறுவனம் மேற்கொண்டது.

இதன் பணிகள் நிறைவு பெற்று கடந்த 13-ஆம் தேதி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் உற்பத்தியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மின்உற்பத்தி முழு அளவை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக்கழக உயா் அதிகாரிகள் கூறியதாவது:

உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகின் சோதனை ஓட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, மின்சார உற்பத்தி சுமாா் 400 மெகாவாட்டை எட்டியுள்ளது. அடுத்த வாரம் முதல், முழு உற்பத்தித் திறனான 660 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இயக்கப்படும்.

அதில் ஏதேனும் சிக்கல் தொழில்நுட்பக்கோளாறுகள் ஏற்பட்டால் அவை சரி செய்யப்பட்டு முழு திறனுடன் தொடா்ந்து மின்உற்பத்தி மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் வெற்றி அடையும் பட்சத்தில், இந்த மின் நிலையம் வருகிற ஜூன் மாதத்துக்குள் வணிக ரீதியாக இயக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகரிக்கும் மின்தேவை பூா்த்தி செய்யப்படும். விரைவில் 2-ஆவது அலகில் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →