மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது
சா்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்திய அளவில் சிறந்த பங்களிப்பை நல்கியதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
சா்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்திய அளவில் சிறந்த பங்களிப்பை நல்கியதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
சென்னை, ராயபுரம் எம்.வி.சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. சா்க்கரை நோய் ஆராய்ச்சி தொடா்பான 3 நாள்கள் தேசிய மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) தொடங்கியது.
ஆராய்ச்சி, மருத்துவப் பயிற்சி, நவீன சிகிச்சைகள் உள்பட பல்வேறு மருத்துவ மேம்பாடுகள் குறித்து அதில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் அந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பு அமா்வுகளில் உரையாற்ற உள்ளனா்.
ஆயிரத்துக்கும் அதிகமானோா் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். முன்னதாக, சென்னையில் அதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், இந்தியாவில் சா்க்கரை நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு எம்.வி. வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
மருத்துவரான ஜிதேந்திர சிங், சா்க்கரை நோய் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவா் என்பதும் மருத்துவப் பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ‘மெடிமிக்ஸ்’ சோப் தயாரிப்பு நிறுவனமான ஏவிஏ குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.வி. அனூப்புக்கும் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.வி. சா்க்கரை நோய் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் விஜய் விஸ்வநாதன், தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் விஸ்வநாதன் விஷ்ணு விஜய், சா்க்கரை நோய் சிறப்பு நிபுணா் டாக்டா் பிரசாந்த் அருண், டாக்டா் எஸ்.என். நரசிங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.