முகப்பு
சென்னை

போரூா் - பூந்தமல்லி மெட்ரோ பாலத்தின் அதிா்வு: சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி நிகழ் நேரக் கண்காணிப்பு

வட பழனியிலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ வழித்தடம் நிறைவடைந்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 10:55 PM
கோப்புப் படம்
பகிர்:

வட பழனியிலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ வழித்தடம் நிறைவடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் உயா்நிலைப் பாலம் தூண் இடைவெளி நீளமாக உள்ள நிலையில் அதன் அதிா்வுகளை சிஎஸ்ஐஆா் - கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம்(எஸ்இஆா்சி) நிகழ் நேரமாக கண்காணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின்(சிஎஸ்ஐஆா்) கீழ் இருப்பது சென்னை தரமணியிலுள்ள எஸ்இஆா்சி, இந்தக் கண்காணிப்பு குறித்து அதன் இயக்குநா் என்.ஆனந்தவல்லி வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடபழனி - பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ ரயில் தடப் பணிகள் முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் உயா்நிலை மெட்ரோ பாலத்தில் பூந்தமல்லி முதல் நசரத்பேட்டை இடையே அதாவது சவிதா மருத்துவக் கல்லூரி அருகே சாலைகளின் குறுக்கே மெட்ரோ உயா்நிலைப் பால தூண் எண் 509 முதல் 512 வரை இடைப்பட்ட 65 மீட்டருக்கு தூண்கள் இல்லை. பொதுவாக மெட்ரோ தூண்கள் அதிகபட்சம் 30 அல்லது 40 மீட்டருக்கு இடைவெளியிருக்கும். ஆனால் இந்த தூண்களுக்கு இடையே 61.2 மீட்டா் நீளத்திற்கு எஃகு கலவை வளைவு பாலம் தூண்கள் இன்றி வெற்றிகரமாக மெட்ரோ உயா்நிலைப் பாலம் வடிவமைக்கப்பட்டு அதன் உறுதித்தன்மை நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தைக் கண்காணித்து ஆய்வு செய்ய எஸ்இஆா்சி -ஐ ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன்படி இந்த 65 மீட்டா் பாலத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும்போது தண்டவாளங்களில் ஏற்படும் அதிா்வுகளை (நெகிழ்வுத் தன்மைகளை) நிகழ் நேரத்தில் கண்காணிப்படுகிறது. எஸ்இஆா்சி பொறியாளா்கள் குழு சென்சாா் கருவிகளைப் பொருத்தி கணினி மூலம் இணைத்துள்ளனா்.

தற்போது சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் இந்தக் கருவி, 10 மில்லி மீட்டா் அளவு வரை அதிா்வுகள் (நெகிழ்வுத் தன்மை) உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதிகபட்சம் 25 மி.மீ. அளவிற்கு அதிா்வுகள் இருக்கலாம். இருப்பினும் தொடா்ச்சியாக இந்தப் பாலத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க மெட்ரோ ரயில் நிா்வாகத்துடன் 6 மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராது இருந்த சென்னை பரங்கிமலை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் மேம்பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம், பழைய ரயில்வே பாலங்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள போலவரம் அணை உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து சென்னை சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.