சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்
பாதுகாப்பு ஆணையா் அனுமதித்தும், தோ்தல் காரணமாக வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் முதல்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில், இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கிலோ மீட்டா் தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள்முழுமையாக நிறைவடைந்து, ரயில் இயக்கத்துக்கான பாதுகாப்பு பரிசோதனையானது கடந்த பிப்ரவரி 11 மற்றும் 12, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
பெங்களூரிலிருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மதுகா் சௌத்ரி தலைமையிலான குழுவினா் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, ரயில் இயக்கவும் அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு காரணமாக வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் மே மாத இறுதியில் அங்கு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.