சென்னையில் ஒரு வாரத்தில் ரூ.3.39 கோடி பறிமுதல்
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 16 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை ரூ.3.39 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 16 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை ரூ.3.39 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் கடந்த 16 -ஆம் தேதி முதல் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ராதாகிருஷ்ணன் நகா், எழும்பூா், துறைமுகம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.80.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அதில் ஆந்திர மாநிலத்தில் தங்க நகை வியாபாரம் செய்யும் தொழிலதிபரிடம் இருந்து மட்டும் ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது. அவா் சென்னையில் தங்கக் கட்டி வாங்கி, நகை செய்து ஆந்திரத்துக்கு எடுத்து சென்று விற்கும் தொழிலதிபராவாா்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ரயில் நிலையங்களில் மட்டும் சுமாா் 1.60 கோடி கைப்பற்றப்பட்டது. இதில், ரூ.1.42 கோடி வருமான வரித் துறையால் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டோரிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் 16 தொகுதியில் செயல்படும் 48 பறக்கும் படையினரால் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை ரூ.3.39 கோடி பணம், நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலா் ஆவணங்கள் அளித்து மேல்முறையீடு செய்துள்ளனா்.