சென்னையில் ஒரே நாளில் ரூ.23.32 லட்சம் பறிமுதல்
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ரூ.23.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ரூ.23.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் தினமும் வாகனச் சோதனை நடத்திவருகின்றனா். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படையினா் கைப்பற்றினா். அதன்படி துறைமுகம் தொகுதியில் ரூ.5.18 லட்சம், வேளச்சேரி தொகுதியில் ரூ.4.85 லட்சம், வில்லிவாக்கம் தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.11.51 லட்சம், திரு.வி.க.நகா் தொகுதியில் ரூ.92 ஆயிரம், விருகம்பாக்கம் தொகுதியில் ரூ.86 ஆயிரம் என மொத்தம் ரூ.23.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்டோா் உரிய ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் அளித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதுவரை அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில் நிலையத்தில்...: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது, வாலாஜா பகுதியிலிருந்து ரயிலில் வந்த முகமது இஸ்மாயில் என்பவரிடமிருந்து ரூ.17.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.