சென்னை: பைக் மீது லாரி மோதல் - ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
மாதவரத்தில் பைக் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் கணவா், மனைவி, மகன் ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.
சென்னை அருகே கொடுங்கையூா் வரலட்சுமி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40), காா் ஓட்டுநா். இவரது மனைவி பிரேமலதா (36). இவா்களது மகன் இன்பச்செல்வன் (8). அம்பத்தூா் பகுதியில் வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை இவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் மணலியில் உள்ள பிரேமலதாவின் உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு இரவு திரும்பிக்கொண்டிருந்தனா்.
மாதவரம் ரவுண்டானாவில் உள்ள ஆந்திர பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து ஒன்று வெளியே வளைவில் திரும்பியது. அப்போது, காா்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தை வலது புறமாக திருப்ப முயன்றாா். அந்நேரத்தில், பின்னால் வேகமாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னா் லாரி மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த காா்த்திகேயன், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்கு சென்று, மூவரின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் அன்பரசு (44) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.