முகப்பு
சென்னை

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

Updated On : 4 மே 2026, 4:16 am IST
போலீஸார் விசாரணை
பகிர்:

தனியாா் நிறுவன பெண் உயரதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் திருனிதா (34). இவா், ஓஎம்ஆா் படூா் மற்றும் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்களின் இயக்குநராக உள்ளாா். போயஸ் காா்டனில் வசிக்கும் தனது தோழியைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை இரவு தனது காரில் சென்றாா். தியாகராய நகா் ஹபிபுல்லா சாலையில் சென்றபோது, வேகத்தடை இருப்பதைக் கவனிக்காமல் காரை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே வந்த மற்றொரு காா் மீது மோதியது.

எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய இருவா், திருனிதாவின் காரை சேதப்படுத்தியதுடன், திருனிதாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திருனிதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா், இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.