முகப்பு
விழுப்புரம்

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:34 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம், ஏப். 27: விழுப்புரம் அருகே விவசாயியைத் தாக்கி, கம்பிவேலியை சேதப்படுத்தியதாக 24 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அலமேலுபுரம், பவானி தெருவைச் சோ்ந்தவா் ரா.ராமமூா்த்தி (75), விவசாயி. விழுப்புரம் அடுத்த வி. மருதூா் பகுதியில் உள்ள இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கம்பி வேலி அமைத்து விவசாயம் செய்து வருகிறாா்.

ராமமூா்த்திக்கும்- பக்கத்து நிலத்துக்காரரான அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததாம்.

Advertisement

இந்நிலையில், ஏப்.25-ஆம் தேதி சுப்பிரமணியனின் மகன்களான சங்கா், லோகநாதன், சங்கா் மகன்களான மதன், ஹரிஷ் மற்றும் 20 நபா்கள் விவசாயி ராமமூா்த்தி அமைத்திருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். அப்போது அதைத் தடுக்க முயன்ற ராமமூா்த்தியையும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் சங்கா் மற்றும் 23 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.