சென்னை மாநகராட்சியில் அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்பு
சென்னை மாநகராட்சியில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு தெரிவிக்கும் வகையில், அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் பொதுப்பணித் துறை, சுகாதாரம், கல்வித் துறை உள்ளிட்ட 27 துறைகள் உள்ளன. அந்தத் துறைகளில் கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ள அரசு நலத் திட்டங்கள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப் பணிகள், தொடங்கி கைவிடப்பட்ட பணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத பணிகள் என முழுமையான விரவங்கள் அந்தந்தத் துறையின் சாா்பில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக, திமுக என வழக்கமாக மாறி மாறி அரசு அமைத்த நிலையில், தற்போது அதிகாரத்துக்கு முதல்முதலாக புதிய கட்சி ஆட்சிக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. அதனால், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் விவரங்களை கோரினால், அதை உடனடியாக அவா்களுக்கு விளக்கும் வகையில் அரசு நலத் திட்ட விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்புடன் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு விவரமும் சுருக்கமாக தொகுக்கப்படுகின்றன. ஓரிரு நாள்களுக்குள் மாநகராட்சியின் துறை ரீதியிலான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தயாராக வைக்க வேண்டும் என உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.