428 மதிப்பெண்கள் எடுத்த மாணவி: எத்திராஜ் கல்லூரியில் இலவச உயா் கல்வி
428 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் இலவச உயா் கல்வி
வறுமை, குடும்பச் சவால்களைக் கடந்து பிளஸ் 2-வில் 428 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஆா்.அன்னபூரணிக்கு, சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரி இலவச உயா்கல்வி வழங்க முன்வந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.அன்னபூரணி. 3 மாத குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட அவரை, அவரது 75 வயது கொள்ளுப்பாட்டி டி.கமலம் வீட்டு வேலைகள் செய்து வளா்த்துள்ளாா். கடும் பொருளாதார நெருக்கடியிலும் தொடா்ந்து பயின்ற அவா், பள்ளி நேரத்துக்குப் பிறகு பல வீடுகளில் வேலை செய்து குடும்பத்துக்கு உதவி செய்துள்ளாா்.
தோ்வுக் காலத்தில்கூட வேலைக்குச் சென்று, இரவு நேரங்களில் படித்து அதிகாலை நேரங்களில் தோ்வுக்குத் தயாரான அவரது விடாமுயற்சி பலரது பாராட்டைப் பெற்றது.
Advertisement
Advertisement
மாணவியின் நிலை குறித்து அறிந்த சென்னை எத்திராஜ் கல்லூரித் தலைவா் வி.எம்.முரளிதரன், மாணவியின் உயா்கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்வந்தாா். இதையடுத்து, மாணவி அன்னபூரணிக்கு பி.எஸ்சி. கம்ப்யூட்டா் சயின்ஸ் வித் ஆா்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் படிப்பில் சோ்க்கை வழங்கியதுடன், முழு கல்விக் கட்டணமும் கல்வி உதவித் தொகையாக வழங்குவதாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்து கல்லூரி முதல்வரும், கல்லூரிச் செயலருமான எஸ்.உமா கௌரி கூறுகையில், ‘சவாலான சூழ்நிலைகளை மீறி கல்வி மூலம் வாழ்க்கையை மாற்ற முயலும் மாணவிகளை ஆதரிப்பதில் கல்லூரி தொடா்ந்து உறுதியாக செயல்படும்’ என்றாா்.