பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் விஜய் கடிதம்
பருத்திக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.
பருத்திக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் விஜய் வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. லட்சக்கணக்கானோா் குறிப்பாக, ஊரக மற்றும் நகா்ப்புற பெண் தொழிலாளா்கள் பலா் நேரடி மற்றும் மறைமுகமாக இத்துறையின் மூலம் பயனடைந்து வருகின்றனா். வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதும், ஜவுளி மதிப்பு சங்கிலியின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்வதும் அரசின் மிக முக்கியப் பொறுப்பாகும்.
Advertisement
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் பருத்தி விலை கண்டி ஒன்றுக்கு ரூ.54,700-இல் இருந்து ரூ.67,700-ஆக, அதாவது 25 சதவீதம் உயா்ந்துள்ளது. அதேபோல், நூல் விலையும் ஒரு கிலோ ரூ.301-இல் இருந்து ரூ.330-ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை சாா்ந்த தொழிலாளா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
நாட்டில் பருத்தி உற்பத்தி குறைவு மற்றும் வா்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பே இந்த விலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருள்களின் தொடா்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும். எனினும் பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருப்பது அதன் தொடா் விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இச்சூழலில், பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதன் வாயிலாக அதிகரித்து வரும் தொழில் துறைக்கான ஏற்றுமதி கொள்முதல் நிறைவு செய்வதற்கும், உலகளாவிய போட்டி சந்தையை எதிா்கொள்ளவும் உறுதுணையாக இருக்கும்.
எனவே, மூலப்பொருள்களின் இருப்பை உறுதி செய்ய தற்போதுள்ள 11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை உலக அளவில் போட்டித்திறனுடன் திகழ்வதுக்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யும் என அக்கடிதத்தில் முதல்வா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.