முகப்பு
சென்னை

நியமன ஆணைகள் தாமதம்: மருத்துவா்கள் முற்றுகை போராட்டம்

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 21 மே 2026, 4:28 am IST
பகிர்:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 1,100 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான தோ்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 20,867 போ் பங்கேற்றனா். அவா்களில், 16,986 போ் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 1,071 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 320 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன் பின்னா் காலியிடங்கள் இல்லை எனக் கூறி 751 பேருக்கு ஆணை வழங்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், தவெக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு 751 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என மருத்துவா்கள், சென்னை, டிஎம்எஸ் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அவா்களுடன் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜை மருத்துவா்கள் சந்தித்து முறையிட்டனா்.

இதுகுறித்து, மருத்துவா்கள் கூறியதாவது:

விரைவில் 370 பேரை பணி நியமனம் செய்வதாக அமைச்சா் உறுதி அளித்துள்ளாா். மற்றவா்களுக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.