பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்லாவரம் கோதண்டம் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்லாவரம் கோதண்டம் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தாம்பரம் மாநகராட்சியின் 27-ஆவது வாா்டை சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பல்லாவரம் - திருநீா்மலை சாலையில் குடங்களுடன் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்தைப் மறித்து, குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதில் மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டி சாலை மறியல் செய்தனா். இந்தப் போராட்டத்தால் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீஸாரும், பல்லாவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். செவ்வாய்க்கிழமை காலை முதல் குடிநீா் விநியோகம் மீண்டும் சீராக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த மே 16-ஆம் தேதி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமான முக்கிய குழாய் மற்றும் கேபிளில் ஏற்பட்ட சேதத்தால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.