கல்பாக்கம் வாசகர் வட்டம் சார்பில் சாதனைப் பெண்களுக்கு விருது
கல்பாக்கம் வாசகர் வட்டம் சார்பில் நெஸ்கோ கூடைப்பந்து திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மகளிர் விழா 2018'இல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கல்பாக்கம் வாசகர் வட்டம் சார்பில் நெஸ்கோ கூடைப்பந்து திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மகளிர் விழா 2018'இல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிளை நூலகம் கல்பாக்கம் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் விழா 2018 கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மகளிருக்கு இடையிலான வினாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தவிர, 'பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது குடும்பச் சூழலா? சமூகச் சூழலா?' என்ற தலைப்பில் விவாத மேடை, மாணவர்களுக்கான பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வாயலூர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை கீதாலட்சுமி தலைமை வகித்து உரையாற்றினார்.
கல்பாக்கம் மழலையர் பள்ளி ஆசிரியை பொன்மணி சிவசண்முகம் வரவேற்றார். கிளைநூலக அலுவலர் அல்ஃபோன்ஸ் முன்னிலை வகித்தார். முனைவர் சிவ ஸ்ரீகுமார் நோக்கவுரையாற்றினார். பையனூர் அறுபடை வீடு கட்டடவியல் துறை மற்றும் மகளிர் மேம்பாடு தலைவர் எஸ்.பி.சங்கீதா சஞ்சித், உத்தண்டி சக்தி வித்யாலயா பள்ளி தாளாளர் காயத்ரி தனபால் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னாள் எம்எல்ஏ மா.தனபால், புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சித் தலைவர் இலக்கியச் சோலை கவிஞர் க.கலியபெருமாள், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் நெஸ்கோ பொதுச் செயலாளர் அர்ச்சுணன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். சிறந்த மக்கள் பாடகராக ராஜேஸ்வரி சிவகுமாருக்கும், சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் சமூக சேவகராக செந்தாமரை, சிறந்த ஆட்டோ ஓட்டுநராக கலைமதி ஆகியோருக்கு அவர்கள் விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.
நிறைவாக, புதுப்பட்டினம் இன்ஃபேன்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த உஷா நன்றி கூறினார்.