முகப்பு
காஞ்சிபுரம்

பிப். 27, 28, மார்ச் 6-இல் மாற்றுத் திறனாளிகள் உபகரணங்களைப் பெறுவதற்கான தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான தேர்வு முகாம்கள் பிப்ரவரி 27, 28, மார்ச் 6 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான தேர்வு முகாம்கள் பிப்ரவரி 27, 28, மார்ச் 6 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இந்திய ஆயில் நிறுவன நிதியுதவியுடன் இந்திய அரசின் அலிம்கோ நிறுவனம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நடத்தப்பட்டு, 15 நாள்களுக்குள் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 27- ஆம் தேதி வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பிப்ரவரி 28- ஆம் தேதி மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், செய்யூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மார்ச் 6- ஆம் தேதி தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு, மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், அரசு சேவை இல்லம் பின்புறம், ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானிடோரியத்திலும் தேர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இம்முகாமில், மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, மனவளர்ச்சி குன்றியோருக்கான கற்பிக்கும் உபகரணங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்கான ஏடிஎல் கிட், செயற்கை கால் உள்ளிட்டவை வழங்கப்படும்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் தவறாது முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →