மதுராந்தகத்தை அடுத்த வெள்ளபுத்தூர் ஊராட்சியில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளின் குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க ஜலசக்தி அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை இயக்குநர் அபய்குமார், ஹைதராபாத் மத்திய நீர்நிலைக் குழு இயக்குநர் சங்கர் ஆகியோர் தலைமையில் மத்திய அரசின் உயர் அதிகாரிகளின் குழுவினர் செவ்வாய்க்கிழமை வெள்ளபுத்தூர் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, காஞ்சிபுரம் அத்திரவரதர் விழாவை முன்னிட்டு இந்தப் பகுதியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதைப் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம், செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர்கள் அரிகிருஷ்ணன், சுஜிதா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.