படப்பை அருகே திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் வயரைப் பிடித்த 3 வயது குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நசீம் தனது குடும்பத்தினருடன் சென்னை, புளியந்தோப்பு பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முகமதுநசீம், தனது மனைவி ரெஜினாகாந்துன், மகன் முகமது அயான் (3) ஆகியோருடன் சமையல் வேலைக்காக வந்துள்ளார். தம்பதி இருவரும் இரவு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகமது அயான் திருமண மண்டபத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட மின்வயரை தெரியாமல் பிடித்ததாகத் தெரிகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து குழந்தை மயங்கி விழுந்தது. இதையடுத்து, குழந்தையை படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.