மலைப்பட்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மலைப்பட்டு ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மலைப்பட்டு மற்றும் மாகான்யம் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் மலைப்பட்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸார், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.