இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆனம்பாக்கம் கிராமம், பள்ளத்தெரு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் (33), லோகு (40). அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அரசுப் பேருந்து ஒன்றை முந்தினர்.
அதே நேரத்தில், வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனம் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கரவாகனத்தை ஓட்டிச் சென்ற கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் இருந்த லோகுவை அப்பகுதியினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து தொடர்பாக வாலாஜாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.