காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் நிதித்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து சனிக்கிழமை நடத்திய கடன்கள் வழங்கும் முகாமில் 1,484 பேருக்கு ரூ.109.07 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் லட்சுமி கோவிந்தராஜ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடந்த முகாமில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கடன்கள் கோரி மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கடன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2-ஆவது நாளான சனிக்கிழமை கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியன் வங்கி பொதுமேலாளர் டி.தேவராஜ் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி பிராந்திய மேலாளர் எஸ்.மோகன்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணைப் பொதுமேலாளர் மகேஷ்குமார், கனரா வங்கி பிராந்தியத் தலைமை மேலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கே.தமிழரசு வரவேற்றார்.
இந்த முகாமில் 1,484 பேருக்கு வீட்டுக்கடன், மகளிர் சுயஉதவிக் கடன், தனிநபர் கடன், வாகனக்கடன் என பல்வேறு வகையான கடன்கள் ரூ.109.08 கோடிக்கு வழங்கப்பட்டன.
கடனுதவிகளை காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் ஜெ.சரவணன் வழங்கினார்.
முகாமில் சிண்டிகேட் வங்கியின் துணைப் பொதுமேலாளர் ஜெகதீசன், பேங்க் ஆப் பரோடா கோட்ட மேலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஷண்முகராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.