காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான சைக்கிள் கடை உள்ளது. இக்கடையில் 200-க்கும் மேற்பட்ட புது சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த இக்கடையில் புகை வரத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் க.குமாா் தலைமையிலான குழுவினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
இந்த விபத்து தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.