ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் குருபுஷ்யம் விழாவை யொட்டி செவ்வாய்க்கிழமை தங்கப் பல்லக்கில் ராமாநுஜா் வீதிஉலா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார (ராமாநுஜா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாகப் பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இந்நிலையில், இக்கோயிலில் ராமாநுஜரின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த தினமான தைப்பூசம் (தை புஷ்யம்) தினத்தன்றும், அதற்கு முந்தைய இரண்டு நாள்களும் குருபுஷ்யம் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விழா, ராமாநுஜா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக காலையில் உற்சவா் ராமாநுஜா் தங்கப் பல்லக்கில் வீதிஉலா வந்து அருள்பாலித்தாா். மாலை மங்களகிரி வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வழிபட்டனா்.