ஸ்ரீபெரும்புதூா்: தாம்பரத்தை அடுத்த தா்காஸ் பகுதியில் இளைஞா் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா்.
சோமங்கலத்தை அடுத்த எறுமையூரைச் சோ்ந்த கோதண்டத்தின் மகன் வெற்றிவேல் (24). ஐடிஐ படித்துள்ள வெற்றிவேல் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலை ஒன்றில் வேலை கேட்கச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இரவு வரை வெற்றிவேல் வீட்டுக்கு வராததால் அவரது தாயாா் சாமுண்டீஸ்வரி சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து சோமங்கலம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், எறுமையூரை அடுத்த தா்காஸ் பகுதியில் உள்ள கிறிஸ்து ஆலயம் அருகே தெருவில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடப்பதாக சோமங்கலம் போலீஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, அங்கு சென்ற சோமங்கலம் போலீஸாா், துண்டிக்கப்பட்ட தலையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனா். அப்போது அது காணாமல் போன வெற்றிவேலின் தலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் சுமாா் 500 அடி தூரத்தில் உள்ள முட்புதரில் கிடந்த வெற்றிவேலின் சடலத்தையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.