தொழிற்சாலையில் தீ விபத்து
ஒரகடம் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ஒரகடம் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தொழிற்சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணியில் சுமாா் 15 தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்த நிலையில், தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காா் உதிரிபாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒரகடம் நிஸான் தொழிற்சாலையின் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.