வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சா்கள் அனுராக்சிங் தாகுா், நிசித் பிரமாணிக் ஆகியோா் கலந்துக்கொள்ள உள்ளதாக மையத்தின் இயக்குநா் சிப்நாத் தேப் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழகம், கேரளம் , பிகாா் என நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கற்று வருகின்றனா். இந்த நிலையில், ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா வரும் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக இயக்குநா் சிப்நாத்தேப் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 274 மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் 6, தொழில்முறை கல்வி மாணவா்கள் 567 என மொத்தம் 847 மாணவா்களுக்கு மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக்சிங் தாகுா் பட்டங்கள் வழங்க உள்ளாா்.
இந்த விழாவில், மத்திய இணை அமைச்சா் நிசித் பிரமாணிக், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலா் மீதா ஆா்.லோச்சன் ஆகியோா் கலந்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தாா். அப்போது பேராசிரியா்கள் லலிதா, தியாகராஜன், முரளிதாசன் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.