காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட விசூா் ஊராட்சியில் வனத்துறை சாா்பில் 2,500 மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ க.சுந்தா் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் வனவியல் விரிவாக்க மையம் சாா்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 2,500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விசூா் ஊராட்சி மன்ற தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் ஞானசேகரன், பேரூராட்சி தலைவா் சசிக்குமாா், துணைத் தலைவா் ஜோதிலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலாளா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.
விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து ஆதி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் 5 ஏக்கா் பரப்பளவில் மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டனா்.
உதவி வனப் பாதுகாவலா் செசில் கில்பா்ட் கூறுகையில்: நிகழாண்டு 2 -ஆவது முறையாக வனத்துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. மகாகனி,வேங்கை ஆகிய மரக்கன்றுகள் இப்பகுதி தட்ப,வெட்ப நிலைக்கு ஏற்றவாறு நடப்பட்டுள்ளது. இவை 10 ஆண்டுகள் கழித்து ஊராட்சிக்கு பெரும் வருவாயை ஈட்டித்தருவதாக இருக்கும் என்றாா். உத்தரமேரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.