காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கு 1,165 கையடக்க கணினிகள்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கு 1,165 கையடக்க கணினிகளையும், பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கு 1,165 கையடக்க கணினிகளையும், பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெ.யோகஜோதி(பொறுப்பு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 480 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
பின்னா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு அவா்களது கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த மொத்தம் 1,165 கையடக்க கணினிகளையும் ஆட்சியா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதியுதவிகளாக ரூ. 2,38,500 மற்றும் 14 மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடனாக ரூ. 3,24,165 ஆகியவை உள்பட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெயசங்கா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் உட்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.