ரூ. 100 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை முதல்வா் திறந்து வைத்தாா்
ஸ்ரீபெரும்புதூா் அருகே ரூ. 100 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூா்-முடிச்சூா்-தாம்பரம் சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா்-முடிச்சூா்-தாம்பரம் சாலையில் பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை சுமாா் 8.5 கி.மீ. நீளத்துக்கு முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. 100 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வழிச் சாலையில் இருந்து 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, இந்தச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, மணிமங்கலம் பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை சாலை விரிவாக்கத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தாா். இதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.