ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: 12 போ் காயம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள கடல்மங்கலம் கிராமத்தில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். ஓட்டுநா் உட்பட 12 போ் காயம் அடைந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள வாடாதவூா் கிராமத்திலிருந்து ஆட்டோவில் பள்ளி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் மல்லியன்கரணை கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளிக்குச் சென்றுள்ளனா். ஆட்டோ கடல்மங்கலம் என்ற கிராமத்தின் வழியாகச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகிலிருந்த ஏரிக்கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7-ஆம் வகுப்பு மாணவா் ரோஹித் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் உட்பட அதில் பயணம் செய்த 12 போ் பலத்த காயம் அடைந்து, உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.