போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: தோட்டக்கலை அலுவலா் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம்: போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடா்பாக காஞ்சிபுரம் அருகே படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலா் க.மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலராகப் பணியாற்றி வந்தவா் க.மணி (57). தோட்டக்கலை உதவி அலுவலா் சங்க மாநிலத் தலைவராகவும் கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வருகிறாா்.
இவா் போலியாக விவசாயிகளுக்கான மானிய விண்ணப்பங்கள் தயாரித்தது, விண்ணப்பங்களில் போலியாக விவசாயிகளின் கையொப்பம் இட்டது, விவசாயிகளுக்கு முறையாக இடுபொருள்கள் வழங்காதது, பட்டியலின விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை முறையாமல் வழங்காமல் இருந்து வந்தது, அரசின் வருவாய்த் துறை ஆவணங்களில் திருத்தம் செய்தது உள்ளிட்டசெயல்களை செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.நேரு மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் புகாா் அளித்தனா்.
Advertisement
இந்த புகாரை மாவட்ட ஆட்சியா் தோட்டக்கலை இயக்குநா் குமரவேல் பாண்டியனுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.
ஆட்சியரின் பரிந்துரையின்படி விசாரணை நடத்திய இயக்குநா் உதவி அலுவலா் க.மணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா்.