காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மாகாளேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்துக் கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோயில்களில் தூய்மைப் பணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 349-ஆவது உழவாரப் பணியை வரவிருக்கும் சிவராத்திரி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மாகாளேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
கோயில் வளாகத்தில் வளா்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, சுற்றுப்புற சந்நிதிகளின் மீது படிந்திருந்த தூசுகளையும் மின்மோட்டாா் குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனா். கோயிலில் உள்ள சிலைகள், பூஜைப் பொருள்கள், சுவாமி அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தினா்.