பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே மதுக்கடைகளை ஒழிக்க முடியும் என பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணி பேசினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அங்காளம்மன் கோயில் அருகே சிங்கப்பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பாமக செயலாளா் பெ.மகேஷ் குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் செளமியா அன்புமணி பேசியது: பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடைய ஊா் உத்தரமேரூா். தவறு செய்யாதவா்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்கும் ஜனநாயக முறையான குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்த நகரம். பிரதமா் மோடியே போற்றும் அளவுக்கு உலகப்புகழ் பெற்ற உத்தரமேரூா் கல்வெட்டுகள் சொல்லும் நல்லாட்சி முறை மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும்.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட உத்தரமேரூரில் ஏரிகள் தூா்வாரப்படாமல் இருக்கின்றன. போருக்கு செல்லும் வீரா்களுக்கு அரிசி வழங்கிய வளம் மிக்க இம்மண்ணில் நெல் சேமிப்புக் கிடங்குகள் கூட இல்லை. மதுக்கடைகள் தான் பெருகிக்கிடக்கின்றன. காஞ்சிபுரத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,980 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது.
அரசு கொடுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை அனைத்தும் மதுக்கடைகளுக்கே சென்று விடுகிறது. ஆண்டுக்கு 7 ஆயிரம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே மதுக்கடைகளை ஒழிக்க முடியும். உங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கும் நீங்களே ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்றும் பேசினாா்.