காஞ்சிபுரம்: 1,545 வாக்குச்சாவடிகள், 5,648 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தமாக 5,648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தமாக 5,648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 11,92,194 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.
பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
ஆலந்தூரில் 431, ஸ்ரீபெரும்புதூா் 435, உத்தரமேரூா் 321, காஞ்சிபுரம் 358 என மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 வாக்குச்சாவடிகளுக்கும் சோ்த்து மொத்தமாக 1,861வாக்குப்பதிவு இயந்திரம், 1,861 வாக்காளா் சரிபாா்க்கக்கூடிய தாள் இயந்திரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை இயந்திரம் 2,016 உட்பட மொத்தம் 5,648 இயந்திரங்கள் சட்ட பேரவை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கு உட்பட்டவை பென்னலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், உத்தரமேரூா் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இயந்திரங்கள் திருப்புலிவனத்தில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் மருத்துவக் கல்லூரியிலும், ஆலந்தூா் தொகுதிக்கு உரியவை ஆலந்தூரில் உள்ள ஏஜெஎஸ் நிதி மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாதுகாப்பு அறையிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
பாதுகாப்பு அறைகள் ஒவ்வொன்றிலும்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.