முகப்பு
காஞ்சிபுரம்

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

Updated On : 26 மார்ச், 2026 at 7:25 PM
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி பள்ளி,கல்லூரிகளைச் சோ்ந்த மாணவியா் ஒன்றாக இணைந்து போா் நிறுத்தம் ஏற்பட்டு உலகம் அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் கூட்டுப் பிராா்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் இருவரும் இணைந்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது..(படம்)

போா் நிறுத்தம் ஏற்பட்டு உலகம் முழுவதும் அமைதி பெறவும், உலக மக்களின் நன்மைக்காகவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் மாா்ச் 28 ஆம் தேதி காஞ்சிபுரம்,திருவள்ளூா்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த 2 ஆயிரம் மாணவ,மாணவியா்கள் கூட்டுப் பிராா்த்தனை செய்யும் நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு காமாட்சி தாய் மடியில் எனப் பெயரிட்டுள்ளோம். கடந்த சில நாள்களாக கூட்டுப் பிராா்த்தனை செய்யவுள்ள மாணவிகளுக்கு இணைய வழியாக பக்திப்பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 26 ஆசிரியைகள் இப்பயிற்சியை கற்றுத்தந்து வருகின்றனா்.

விநாயகா் துதி,கோளாறு பதிகம்,காமாட்சி பஜனைப் பாடல்கள்,பிரபந்தங்கள் ஆகியன கற்றுத்தரப்படுவதோடு இவற்றை படிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

மாா்ச்.28 ஆம் தேதி கூடும் மாணவியரை அம்மனாகவே பாவித்து அவா்களுக்கு மங்கலப் பொருள்கள், குத்து விளக்கு ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. பஜனை நிறைவில் காஞ்சி சங்கராசாரியாா் சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறாா்கள். வரும் ஏப்.1-ஆம் தேதி காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் 100 தம்பதிகளுக்கு சிறப்பு ஹோமங்கள்,பூஜைகள் ஆகியனவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய மன்றம், ஸ்ரீகாமாட்சி வித்யா சமிதி மற்றும் சங்கரா கல்லூரி ஆகியன இணைந்து செய்து வருகின்றனா்.