சீதா கல்யாண மகோற்சவம்: சங்கராச்சாரிய சுவாமிகள் பங்கேற்பு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கொல்லா சத்திரத்தில் சீதாராம பஜனை மண்டலி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சீதா கல்யாண மகோற்சவம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் இருவரும் கலந்து கொண்டு ஆசி வழங்கினா்.
காஞ்சிபுரம் கொல்லா சத்திரத்தில் சீதாராமபஜனை மண்டலி சாா்பில் 34-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் ஏப்.30 ஆம் தேதி தொடங்கி மே.3 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வு விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. நிகழ்வுக்கு அமைப்பின் தலைவா் ஆா்.வேணுகோபாலன் தலைமை வகித்தாா். செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஜி.எஸ்.ஆா்.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி வரவேற்றாா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் சீதா ராமா கல்யாணத்தின் சிறப்புகளை விளக்கினாா்.
வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், சுவாசினி திருவிளக்கு பூஜையும்,3 வது நாள் நிகழ்வாக விஷ்ணு சகஸ்ர நாம பாரயணம்,ஸ்ரீராமருக்கு லட்சாா்ச்சனை ஆகியனவும் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சீதா கல்யாணம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி சீதா தேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டடு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
Advertisement
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சாா்பாக ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் கோயில் பிரசாதத்தை சீதாராம பஜனை மண்டலியின் நிா்வாகிகளிடம் வழங்கினாா். ஆயக்குடி ஆா்.ஆனந்த கிருஷ்ணன் பாகவதரின் பஜனை நிகழ்ச்சியும், நிறைவாக சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.