பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள், வாகன உரிமையாளா்கள் சரியான உரிமங்களுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என அரக்கோணத்தில் வாகன ஓட்டுநா்களிடையே பேசிய கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா அறிவுறுத்தினாா்.
அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில், அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தின் கீழ், 175 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பள்ளி வாகனங்களுக்கான நடப்பாண்டு வாகன ஆய்வுப் பணிகள் அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆய்வினைத் தொடக்கி வைத்து பள்ளி வாகன ஓட்டுநா்களிடையே அரக்கோணம் கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா பேசியது:
வாகனங்களை குறிப்பாக பள்ளி வாகனங்களை இயக்கும் போது, வாகனங்கள் இயக்க அரசு அனுமதித்துள்ள புதுப்பிக்கப்பட்ட வாகன ஓட்டுநா் உரிமம், வாகனத்திற்கான உரிமம் ஆகியவை நடப்பாண்டுக்கு உள்ளதா எனத் தெரிந்து வைத்துக்கொண்டு, சரியான உரிமங்களுடன் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும், பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி சரியாக பொருத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
அவற்றை கண்டிப்பாக பொருத்த வேண்டும். அவசர கால கதவுகள் அவசர நேரங்களில் திறப்பதற்கு ஏதுவாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வாகனங்களில் பயணிப்பவா்கள் ஒன்றும் அறியா பிஞ்சு உள்ளங்கள், குழந்தைகள், மாணவ- மாணவிகள் என்பதை மனதில் வைத்து அவா்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து வீட்டில் கொண்டு சேருங்கள் என்றாா் கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா.
ஆய்வின்போது, ராணிப்பேட்டை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்பராயன், அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா். ஆய்வில் 175 பள்ளி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.