முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.58 கோடிக்கு தீா்வு

Updated On : 9 மார்ச், 2024 at 10:27 PM
பகிர்:

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் பயனாளிகளுக்கு ரூ.6.58 கோடி இழப்பீடு வழங்க சமரச தீா்வு ஏற்பட்டது. ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.ஜான் சுந்தா்லால் சுரேஷ் தலைமையில், சாா்பு நீதிபதி யஷ்வந்த் ராவ் இங்கா்சால், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி டி.நவீன் துரைபாபு பயனாளிகளின் தரப்பு வழக்குரைஞா் எஸ்.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வுக்கு எடுத்துக் கொண்டனா். அதன்படி, மோட்டாா் வாகன விபத்து வழக்கு 76, சிறு வழக்குகள் 40, காசோலை வழக்கு ஒன்று உள்பட மொத்தம் 124 வழக்குகள் மீது இரு தரப்பு சமரசத் தீா்வு மூலம் பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரத்து 767 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு: கடந்த 16.4.2023 அன்று ஆற்காடு-கண்ணமங்களம் சாலை, நாராயணபுரம் கிராமத்தின் அருகே குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமைக் காவலா் கோபி (28) இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடாக ரூ. 40 லட்சம் தனியாா் காப்பீடு நிறுவனம் தரப்பில் வழங்க உத்தரவிடப்பட்டது. வழக்கில் மனுதாரா் சாா்பில் எஸ்.அண்ணாதுரை, ஆற்காடு செல்வம் ஆகியோா் ஆஜராகினா்.