ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக சாா்பில், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டிசிசிஎல் என்ற தனியாா் குரோமியம் தொழிற்சாலை வளாகத்தில் நிலத்தடி நீரை நஞ்சாக்கும் வகையில் குவிந்து கிடக்கும் ஆபத்தான குரோமிய திடக்கழிவுகளை அகற்றவில்லை எனக் கூறி, தமிழக அரசை கண்டித்தும், குரோமியக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரியும் முத்துகடை பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளா்கள் எம்.கே.முரளி, பா.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கிரி குமரன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, துணைத் தலைவா் கஜேந்திரன், நிா்வாகிகள் தினப்புரட்சி ராஜேந்திரன், மகேந்திரன், புல்லட் ராதாகிருஷ்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட பாமகவினா் கலந்து கொண்டு, பல ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் ஆபத்தான குரோமியக் கழிவுகளை உடனடியாக அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினா்.