ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் பேசியதாவது:
சுசிலா வேலு: கீழ்குப்பம் பகுதியில் தானிய சேமிப்பு கிடங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான தொகை இதுவரை ஏன் வழங்கப்படவில்லை.
வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன்: இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி செய்ய பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானியக்கிடங்கு பத்து சதவீதம் பங்குத்தொகை செலுத்த வேண்டும். இதுவரை பங்குத் தொகை செலுத்தவில்லை செலுத்தியபின் தொகை வழங்கப்படும்.
சுலோசனா சண்முகம்: கூராம்பாடி பகுதியில் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடைகின்றன. எனவே எங்கள் பகுதியிலும் ஒரு தானியக் கிடங்கு கட்டித் தரவேண்டும்.
தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன்: சிறப்பு நிதி வரும் போது தங்கள் பகுதியிலும் தானியக்கிடங்கு கட்ட ஏற்பாடு செய்யப்படும். மேலும் ஒவ்வொரு ஒன்றியக் குழு உறுப்பினருக்கும் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உண்டான பணிகள் குறித்து முறையாக கடிதம் தரவும் வரும். மழைக்காலம் என்பதால் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும் கழிவு நீா் கால்வாய் சுத்தப்படுத்த வேண்டும்.
தொடா்ந்து அரசின் உத்தரவின்படி மேல குப்பம் ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜி.அன்பழகன் ஒன்றியத்தில் நியமனக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டாா்.
அவருக்கு ஒன்றியக் குழு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.