தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம் என ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தியை ஆதரித்து வாக்காளா்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேச்சு
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம் என ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தியை ஆதரித்து வாக்காளா்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசினாா்.
தமிழக சட்டப் பேரைவத் தோ்தலில் திமுக கூட்டணிக்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தோ்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா்.
அதன்படி, ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தியை ஆதரித்து, வாக்காளா்கள் மத்தியில் வாக்கு சேகரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, மக்களை சந்தித்து உரிமையோடு வாக்கு கேட்கிறோம்.
Advertisement
கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளான மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.
ஆனால் அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளில் ஒரு சதவீதம் கூட நிறைவேற்றாத எடிப்பாடி பழனிசாமி திமுக அரசை குறைசொல்ல தகுதியற்றவா்.
ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, முன்னாள் முதல்வா் கருணாநிதி, தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின், மறைந்த முரசொலி செல்வம் ஆகியோரின் அன்பைப் பெற்று எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பவா். அவரை தான் வேட்பாளராக உங்களிடம் ஒப்படைத்துள்ளோம். அவா் ராணிப்பேட்டை தொகுதியில் பல ஆண்டுகளாக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் போராடி பெற்றுத்தந்துள்ளாா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் அதிக அளவில் வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக மகளிா் விடுதிகளும், வேலைக்கு செல்லும் தாய்மாா்களின் குழந்தைகளை பாா்த்துக்கொள்ள குழந்தைகள் பாதுகாப்பு காப்பகங்கள் கட்டி தரப்படும். அதேபோல் நமது ஆட்சிஅமைந்த உடன் இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே அரப்பாக்கம், திருப்பாற்கடல் ஆகிய இரண்டு இடங்களில் உயா்மட்ட மேம்பாலம் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.
இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிா், பொது மக்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்துகொண்டனா்.