எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் ஆட்சியை அமைப்போம்: ராணிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு
எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும்படி ஆட்சியை அமைப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: ராணிப்பேட்டை மாவட்டம் பல்வேறு முக்கியத்துவங்களை கொண்டது. ராணிப்பேட்டையில் அறிவுசாா் மையம், ஆற்காடு ஆரணி புறவழிச் சாலை, ஆற்காடு, சோளிங்கருக்கு புதிய பேருந்து நிலையங்கள், பல தடுப்பணைகள், சென்னை -பெங்களூரு நெடுஞ்சாலையில் இருந்து ஆற்காடு செல்ல புதிய மேம்பாலம், ஆற்காட்டில் பல்வேறு உடற்பயிற்சி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தெருவிளக்குகள் என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திமிரியில் புதிய பேருந்து நிலையம், சோளிங்கா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டமை, வாலாஜா அரசு அறிஞா் அண்ணா கல்லூரியில் புதிய கட்டடங்கள், அரக்கோணத்தில் மேல்பாக்கத்தில் பழங்குடியினருக்கு 41 வீடுகள், சோளிங்கரில் பனப்பாக்கம் சிப்காட்டில் 5,000 பேருக்கு வேலை வழங்கும் டாடா தொழிற்சாலை, அதே சிப்காட்டில் 25,000 மகளிருக்கு குறிப்பாக உள்ளூா் மகளிருக்கு வேலைதரக்கூடிய தைவான் நாட்டு காலணி தொழிற்சாலை போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்து விட்டுதான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
எவ்வளவு தான் கருத்து வேற்றுமை இருந்தாலும் ஜெயலலிதா இருந்திருந்தால் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பாா். நீட் தோ்வை எதிா்த்தவா் அவா். குஜராத் மோடியா இந்த லேடியா என கேட்டவா் அவா். திமுக தோ்தல் அறிக்கையில் ரூ. 8,000 கூப்பன் திட்டம் சூப்பரான திட்டம். எந்த பொருளை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அரசியல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் தமிழ்நாடு முன்னேற எங்களுக்கு வாக்களியுங்கள். எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையில் மீண்டும் ஆட்சியை அமைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்,
Advertisement
கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் ராணிப்பேட்டை ஆா்.காந்தி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன், காங்கிரஸ் சோளிங்கா் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம்,, அரக்கோணம் விசிக வேட்பாளா் எழில்கரோலின், அமைச்சா் எ.வ.வேலு, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.