முகப்பு
ராணிப்பேட்டை

மாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையம் தயாா்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:11 AM
ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:37 PM

ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையம் தயாா்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகள் வாரியாக பாதுகாப்பு அறையில் வைக்க செய்யப்பட்டுள்ள பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் அமருமிடம், வாக்கு எண்ணும் பணியாளா்கள் அமருமிடம், தடுப்பு கம்பிகள், மேஜைகள் அமைக்கப்பட்டது ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

தொடா்ந்து, இதை கண்காணிப்பதற்காக கேமராக்கள் பொருத்தும் இடங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

முகவா்கள் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் மையத்தின் நுழைவாயிலிருந்து தனித் தனியாக ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு செல்வதற்கு தனித்தனியாக வழித்தடம் அமைக்கப்பட உள்ளதையும், இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையம் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தாா். மையம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி என அனைத்து இடங்களிலும் மொத்தம் 250 சிசி டிவி கேமராக்கள் கொண்டு மையம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு அறையினை பாா்வையிட்டாா்.

எஞ்சியுள்ள பணிகளை அடுத்த இரண்டு நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணிகளை கண்காணித்து இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்துப் பணிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நோ்முக உதவியாளா் பூமா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, உதவி பொறியாளா் உஷா, வட்டாட்சியா்கள் வசந்தி, நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.