முகப்பு
ராணிப்பேட்டை

ரூ.15,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

அரக்கோணத்தில் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கியதாக வடமாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் தணிகாசலத்தை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 12:04 am IST
தணிகாசலம்
பகிர்:

அரக்கோணத்தில் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கியதாக வடமாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் தணிகாசலத்தை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமம், ஸ்ரீராம் நகரைச்சோ்ந்தவா் வினோத். இவா் தனக்கு சொந்தமாக அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள நிலத்தின் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக வடமாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் தணிகாசலத்தை அனுகியுள்ளாா்.

பட்டா பெயா் மாற்றம் செய்ய தணிகாசலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்காக ஒரு மாதம் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுக்க மனமில்லாத வினோத், ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இப்புகாா் குறித்து டிஎஸ்பி கணேசன், தீவிர விசாரணை நடத்தினாா். இதையடுத்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த வினோத், இது குறித்து தணிகாசலத்திடம் கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். அப்போது மாறுதலாகி செல்லும் வட்டாட்சியா் வெங்கடேசனுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

அந்த விழாவில் இருந்து வெளியே வந்த தணிகாசலம், வட்டாட்சியா் அலுவலகத்தின் உள்ளே வினோத்தை வரச்சொல்லி ரூ.15,000 பணத்தை பெற்றுக் கொண்டபோது அங்கிருந்த டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸாா், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், தக்கோலத்தில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று அங்கும் சோதனை நடத்தினா்.