வாணியம்பாடி, ஆலங்காயத்தில் குறைதீா் முகாம்: 46 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
வாணியம்பாடி, ஆலங்காயம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாம்களில் 46 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாம்களில் 46 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு திங்கள்கிழமையும் அந்தந்த வட்ட அளவிலேயே மக்கள் குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திங்கள்கிழமை காலை வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகளைக் கேட்டு 28 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. அதேபோல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 18 மனுக்கள் பெறப்பட்டன. இரு வட்டங்களிலும் அளிக்கப்பட்ட 46 மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
இந்த முகாமில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், தனி வட்டாட்சியா் சுமதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.