ஆம்பூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக பொக்லைன், டிப்பா் லாரி ஆகியன சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் சாமியாா் மடம், ஆம்பூா் அருகே பச்சகுப்பம், தேவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் பச்சகுப்பம் பாலாற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரிகளில் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து, பொக்லைன், டிப்பா் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா், வாணியம்பாடியைச் சோ்ந்த முருகன், காஜா நவாஸ் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.